Saturday 14 January, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் 



மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு


வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது


கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க


வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது


வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி


தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது


மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய


அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது


பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

---------***-------------


தைமாதம் தைமாதம்
தமிழனுக்கு நெய்மாதம்
கைவிட்ட கனவெல்லாம்
கைகூடும் மெய்மாதம்


கும்மியடி கும்மியடி
குங்குமமே கும்மியடி
தைமகளும் வந்துவிட்டாள்
தாலிக்கொடி தந்துவிட்டாள்


கோத்துயெடு கோத்துயெடு
கொத்தோடு இஞ்சிமஞ்சள்
கட்டியெடு கட்டியெடு
கட்டோடு செங்கரும்பு


கூரைபிரி கூரைபிரி
கீத்தெல்லாம் மாத்தியெறி
மாடுபிடி மாடுபிடி
மணிச்சலங்கை பூட்டிவிடு


சுண்ணாம்பு வெள்ளாடை
சுவரெங்கும் கட்டிவிடு
மாக்கோலப் பொன்னாடை
முன்வாசல் இட்டுவிடு


முத்தமிடு முத்தமிடு
மண்தொட்டு முத்தமிடு
நெத்திவிழும் நீர்முத்தை
நெஞ்சாரக் கொஞ்சிவிடு


பொங்குதடி பொங்குதடி
புதுப்பானை பொங்குதடி
பொங்குறதும் பூக்குறதும்
புதுச்சோறா பூமுகமா


நிலமகளை நீர்முகிலை
மாடுமனை ஏர்உழவை
நெஞ்சோடு நெகிழ்வோடு
கொண்டாடும் பொங்கலிது


பால்பொங்கல் கண்டவன்நான்
பனிப்பொங்கல் பார்க்கின்றேன்
பனிதூவும் பொழுதுக்குள்
நினைவோடு வேர்க்கின்றேன்


ஆயிரமாய்ப் பண்டிகைகள்
அங்குமிங்கும் வந்துபோகும்
தமிழனுக்கோர் தனிமகுடம்
தமிழ்ப்புதுநாள் வாழ்த்துக்கள்

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 

 http://rajasekaranmca.blogspot.com

Related post

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: